May 30, 2025 18:55:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மருதனார்மடம் சந்தியில் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம்,மருதனார்மடம் சந்தியில் இராணுவம்,பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா மருத்துவமனை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை (01)இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தையடுத்து பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கழுத்து,காலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன என்று யாழ்.போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த நபர் மீதும் அண்மையில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்தியோர் விளக்கமறியலில் உள்ள நிலையில், அதே கும்பலைச் சேர்ந்த ஏனையோரால் மீண்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.