July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தினசரி கொவிட் உயிரிழப்புகள் 200 ஐ கடந்தது; 10 நாட்களில் 2,000 மரணங்கள் பதிவு

இலங்கையில் மேலும் 215 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

115 பெண்களும் 100 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் 2,000 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் தொற்றின் ஆரம்ப காலப்பகுதியில் 1,000 கொவிட் மரணங்கள் பதிவதாகுவதற்கு 418 நாட்கள் சென்றுள்ளது.

எனினும், ஆகஸ்ட் 21 முதல் கடந்த பத்து நாட்களில் நாட்டில் 2,000 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3828 பேர் இன்று (01) இனங் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு இன்று 7.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 44,130ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 58,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 76,216 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 1,136,780 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று (30 ஆகஸ்ட்) மொத்தம் 559,638 பேருக்கு செவ்வாய்க்கிழமை (31 ஆகஸ்ட்) 511,142 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அவர்களில், 930,395 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகளின் 2வது டோஸூம் 89,446 பேருக்கு 1வது டோஸூம் 42,262 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது.