May 25, 2025 17:35:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

’12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு கோரிக்கை’

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் நாள்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை குழந்தை நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஃபைசர் மற்றும் மொடர்னா போன்ற கொவிட் தடுப்பூசிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் நளின் கித்துல்வத்த கூறினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி போடலாம் என்று எங்களிடம் கேட்கிறார்கள்.12 வயதுக்கு மேற்பட்ட மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்சமயம் 200 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும்,மருத்துவமனை தற்போது அதன் முழு திறனை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொவிட் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அதிகபட்ச திறன் 210 ஆகும். மேலும்,கொவிட் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஆறு அவசர சிகிச்சை பிரிவின் படுக்கைகள் அனைத்தும் தற்சமயம் நிரம்பியுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.