July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையர்களுக்கு கட்டாரில் அதிகமான வேலை வாய்ப்புகள்!

இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக கட்டார் தூதுவர் ஜாசின் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் கட்டார் தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையே விசேட சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, கட்டார் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த அமைச்சர் பீரிஸ், பொருளாதார வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் துறைமுக நகர விஷேட பொருளாதார வலயம், சர்வதேச நிதி நிலையம், சுற்றுலாத் துறை மற்றும் எரிசக்தித் துறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழலை ஆராய்வதற்காக தூதுவர் சொரூருக்கு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது, அமைச்சர் பீரிஸின் கருத்துக்களை வரவேற்றுள்ள தூதுவர் சொரூர், தனது நேர்மையான பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், கொவிட் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் கட்டார் அரசாங்கம் உதவத் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சவாலான நேரத்தில் அவசர சுகாதாரத் துறைத் தேவைகளை நீடிக்க கட்டார் அரசாங்கம் தயாராக இருக்கின்றமைக்காக அமைச்சர் பீரிஸ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஏனைய சர்வதேச மன்றங்களில் இலங்கை அரசாங்கததிற்கு கட்டார் அரசாங்கம் அளித்த ஆதரவுக்கு அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்தள்ளார்.

கட்டர் அரசின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்காக கட்டாரில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர் சமூகத்தின் மதிப்புமிக்க பங்களிப்புக்களை தூதுவர் சொரூர் நினைவு கூர்ந்ததுடன், இலங்கையர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கிடையேயான வணிகப் பிரதிநிதிகளின் வழக்கமான பரிமாற்றங்கள் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாட்சியை மேலும் விரிவாக்க உதவும் என அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் சொரூர் இருவரும் குறிப்பிட்டனர் என்று வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.