
இலங்கையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறிய 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 20 ஆம் திகதி இரவு முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரம் வீதிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய வீதிகளில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது, ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த 718 பேரை 24 மணித்தியாலங்களில் கைது செய்துள்ளதுடன், 73 வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 2020 ஒக்டோபர் மாதம் முதல் 61,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.