May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசிகள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விளக்கம்

புலம்பெயர்ந்த பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் நாடுகளுக்குள் நுழைவதற்கு குறிப்பிட்ட கொரோனா தடுப்பூசியைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்று எந்தவொரு நாடும் கட்டாயமாக்கவில்லை என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தடுப்பூசி வகைகளின் பட்டியலை வெளிநாட்டு அமைச்சிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி பைசர்,  அஸ்ட்ரா செனிகா மற்றும் மொடர்னா போன்ற தடுப்பூசிகள் உலகின் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல, பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகள் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டுள்ளதாக மங்கள ரந்தெனிய மேலும் குறிப்பிட்டார்.

ஆனால் எந்தவொரு நாடும் குறிப்பிட்ட கொரோனா தடுப்பூசியைத்தான் போட்டுக்கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக புலம்பெயர் பணியாளர்களை முன்கூட்டியே பதிவு செய்வதற்காக பிரத்தியேகமாக ஒரு இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.