![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/08/82099580_727923947697463_7638846064627286016_n.jpg?fit=1024%2C680&ssl=1)
File Photo: Facebook/Laksala
இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையமான ‘லக்சல’ காட்சியறையை அமெரிக்காவிலும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வணிக உடன்படிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக பத்திக் கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கைவினைஞர்கள் சபை, சிலோன் கெலரி நிறுவனம் மற்றும் லக்சல நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி அமெரிக்காவின் புளோரிடா, மியாமியில் லக்சல காட்சியறையை திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் மற்றைய மாநிலங்களிலும் அதன் காட்சியறைகள் திறக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.
பத்திக் ஆடைகள், தேயிலை, கோப்பி, ஆயுர்வேத பொருட்கள், அழகு பொருட்கள் மற்றும் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் உட்பட இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்த காட்சிறையின் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இதன்மூலம் இலங்கையின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க முடியுமாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.