July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராஜின் கன்னத்தில் அறைந்ததாக வெளியாகிய வதந்திகளை மறுத்தார் யோஷித

பிரபல சிங்கள பாடகரும், இசையமைப்பாளருமான இராஜ் வீரரத்னவை தான் கன்னத்தில் அறைந்ததாக பொய்யான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பாடகர் இராஜ் வீரரத்ன அந்தப் பதவியை நேற்று இராஜினாமா செய்திருந்தார்.

தனது இராஜினாமா தொடர்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் தனக்கு தனிப்பட்ட வேலைகள் உள்ளமை காரணமாக இந்த முடிவினை எடுத்துள்ளதாக இராஜ் வீரரத்ன குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித ராஜபக்‌ஷ, இராஜின் கன்னத்தில் அறைந்தமையே அவரின் இராஜினாமாவுக்கு காரணம் என்ற செய்தி சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவியது.

இது தொடர்பில் டெய்லி மிரர் பத்திரிகைக்கு கருத்து வெளியிட்ட யோஷித ராஜபக்‌ஷ, இராஜ் வீரரத்னவுக்கும் தனக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என கூறியுள்ளார்.

அத்துடன்,  அவரை நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்வொன்றில் சந்தித்ததாக கூறிய அவர், இராஜ் வீரரத்ன பதவி விலகியமைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.