July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப் பொருளுடன் இருவர் கைது

இந்தியாவிலிருந்து படகு ஒன்றின் மூலம் யாழ்ப்பாணத்துக்கு 139 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த கஞ்சா போதைப் பொருளை கடத்திய சந்தேக நபர்கள் இருவர் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை சோதனையிட்ட போது அதில் கஞ்சா போதைப் பொருள் கடத்தி வரப்பட்டமை கண்டறியப்பட்டது.

கடற்படையினரின் படகைக் கண்டவுடன் சந்தேக நபர்கள் கஞ்சா போதைப் பொருள் பொதிகளை கடலில் வீசி விட்டனர். அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அத்தோடு அவற்றை கடத்தி வந்த பருத்தித்துறை தும்பளை மற்றும் கொட்டடியைச் சேர்ந்த 22, 26 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா போதைப் பொருளின் பெறுமதி 4 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளதுடன், சந்தேக நபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.