July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்று வாரங்களேனும் நாட்டை முடக்க வேண்டும்; 10 நாட்கள் நாட்டை முடக்குவதில் பயனில்லை என்கிறார் திஸ்ஸ

மிக வேகமாக டெல்டா வைரஸ் பரவிக் கொண்டுள்ள நிலையில், மக்களை பாதுகாக்கும் உடனடி தீர்வு நாட்டை முடக்குவதாகும். அதனையே தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.ஆனால் குறைந்தது மூன்று வாரங்களேனும் நாட்டை முடக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நாட்டின் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவிக் கொண்டுள்ளது. நாளாந்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொவிட் மரணங்களை பார்க்கையில் நாட்டின் நிலைமை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.இதனையே அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாம் வலியுறுத்தி வருகின்றோம்.பங்காளிக்கட்சிகள் என்ற ரீதியில் இதனை ஜனாதிபதியிடம் வலியுறுத்தி நிலைமைகளை எடுத்துக்கூறினோம்.

அதற்கமைய நாடு தற்போது முடக்கப்பட்டுள்ளது.ஆனால் மூன்று வாரங்கள் நாட்டை முடக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தினோம்.எனினும் பத்து நாட்கள் நாடு முடக்கப்பட்டுள்ளது. இது போதுமான முடக்கம் அல்ல.எனவே செப்டெம்பர் முதல் வாரத்தில் குறைந்தபட்சம் அரை முடக்கத்தையேனும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மக்களின் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து ஏனைய சகல நடவடிக்கைகளையும் முடக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். வைரஸ் பரவலின் தாக்கம் என்னவென்பது எனக்கு தெரியும்.ஆகவே எமது கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.