July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

File Photo

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வன்முறைக் கும்பலின் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநகரைச் சேர்ந்த 24 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஒன்றில் பயணித்த மூவரை வேறு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் துரத்தி வந்த நால்வர் வழிமறித்து அவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் பிரதேசவாசிகளினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி இருந்ததாக கூறப்படுகின்றது. இவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீதிவானின் விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுப் பொலிஸாரும் முப்படையினரும் வீதிச் சுற்றுக் காவல் பணிகளில் ஈடுபடும் வேளையில் வன்முறைக் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.