July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலகவை சிஐடியில் ஆஜராகுமாறு அழைப்பாணை

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலகவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சிஐடி) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அவரை இன்று (23) மாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஷெஹான் வெளிப்படையாக பேசினார்.இது ஒரு அரசியல் சதி என்று கூறி அதை விசாரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கையின் கத்தோலிக்க சபையினால் முன்மொழியப்பட்ட கருப்பு கொடி பிரசாரத்தை ஏற்பாடு செய்வதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

இதேவேளை, தனது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்ட ஷெஹான் மாலக, இன்று மாலை வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ய சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.