![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/-மாவட்ட-மக்களுக்கு-தடுப்பூசி-_PMO_Tamil_Media_06-e1622808087777.jpeg?fit=1024%2C681&ssl=1)
இலங்கையில் குறைந்தபட்சம் 43 வீதமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை அல்லது இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்று ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இதுவரை ஐந்து வகையான தடுப்பூசிகளிலும் 19.7 மில்லியன் டோஸ் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 14.97 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இரண்டு டோஸ்களையும் 5 மில்லியன் பேர் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“தடுப்பூசி மையங்கள் தயார் நிலையில் இருந்தாலும், சிலர் தடுப்பூசி மையங்களுக்கு வரத் தயாராக இல்லை.எனவே தான், நாங்கள் இராணுவத்தினர் ஊடாக மொபைல் தடுப்பூசி மையங்களை ஆரம்பித்துள்ளோம். அதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் , பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளவர்களுக்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கும் கடற்படையினர் மொபைல் சேவையை ஆரம்பித்துள்ளனர்.
எங்களுடைய முதற் தெரிவாக இருப்பது நாட்டில் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும்.இரண்டாவது தெரிவு நாட்டில் அதன் கொரோனா பரவலை குறைப்பது, மூன்றாவது மருத்துவமனைகளின் மேலாண்மை நான்காவது பொருளாதாரம், பொருளாதார வாய்ப்புகளுக்கு அரசாங்க ஊழியர்களை பங்களிக்குமாறு கேட்டுக்கொள்வது என்றும் அவர் மேலும் கூறினார்.