July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு முடக்கப்படுமா?: நாளை அறிவிக்கப்படவுள்ள தீர்மானம்!

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை சில வாரங்களுக்கு முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினரும், எதிர்க்கட்சியினரும் இது குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இதேவேளை நாளைய தினத்திற்குள் முடக்க நிலைக்கு செல்லாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் நாட்டை முடக்க வைப்போம் என்று தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகளும் நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளன.

இதேவேளை காலம் தாழ்த்தாது குறைந்தது ஒரு வாரமாவது நாட்டை முடக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறாக நாட்டை முடக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகள் தீவிரமடைந்து வருவதால், இது குறித்து ஜனாதிபதி தலைமையிலான கொவிட் செயலணியில் ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாளைய தினத்தில் ஜனாதிபதியினால் அல்லது இராணுவத் தளபதியினால் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.