July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 1,500 கொவிட் தொற்றாளர்கள் மரணம்!

இலங்கையில் மேலும் 170 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6,604 ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை, நாட்டில் கடந்த பத்து நாட்களில் சுமார் 1,500 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு  30,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதன் படி, நாட்டில் இறப்பு விகிதம் 1.3 இல் இருந்து 6.09 ஆக உயர்வடைந்துள்ளது.

மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இது உலகின் நான்காவது மிக உயர்ந்த தினசரி இறப்பு விகிதம் என குறிப்பிடப்படுகின்றது.

இது நாடு முகம் கொடுத்துள்ள கொவிட் தொற்று சூழ்நிலையின் தீவிர தன்மையை காட்டுகிறது.

இதனிடையே இலங்கையில் இன்று (18) மாலை  6 மணிவரை மேலும் 2,428 கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 68,111 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 45,149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 16,528 ஆக உயர்வடைந்துள்ளது.