![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/123294376_1642852342542462_227464033783417269_n-e1626777592947.jpg?fit=1024%2C637&ssl=1)
இலங்கையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு இயல்பு நிலைக்கு வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
ஹிரு தொலைக்காட்சி சேவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இறக்குமதி செலவுகளைக் கருத்தில் கொண்டு எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விலையை அதிகரிக்க பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்த போதும் அரசாங்கம் அதற்கு அனுமதிக்க மறுத்ததாக அவர் இதன் போது கூறினார்.
இதையடுத்து லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு தமது இறக்குமதிகளை இடை நிறுத்த முடிவு செய்ததாகவும் இதன் காரணமாகவே சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம், மஞ்சள் நிற சிலின்டர்களுக்கும் எரிவாயு நிரப்பும் என அறிவித்திருந்த போதும் அந்த முடிவு செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சந்தையில் கடுமையான எரிவாயு நெருக்கடி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடி நிலைமை வழமைக்குத் திரும்ப இன்னும் ஒரு வாரம் ஆகலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.