July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொருளாதாரமா?,ஒட்சிசனா?;அரசாங்கம் விரைவில் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் சஜித்

பொருளாதாரமா,ஒட்சிசனா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு அரசாங்கம் நியாயமான தீர்மானங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்போதுள்ள நிலையில் கொவிட் மரணங்களை தவிர்க்க நாட்டை முடக்க வேண்டும்.எமது மக்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல மூன்றாம் தடுப்பூசியை இப்போதே அரசாங்கம் தயார்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த உண்மை நிலைவரம் தொடர்பிலான தரவுகளை அரசாங்கம் வெளியிடும் வேளையில் அதன் உண்மைத் தன்மையில் சந்தேகம் எழுகின்றது.இது எமக்கும் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது எனக் கூறியுள்ள அவர்,
குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட தரவுகளில் தவறுகள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

நாட்டின் உண்மை நிலைமை என்னவென்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.மக்களுக்கு நாம் உண்மையை கூறும் நபர்கள் என்ற விதத்தில் எமக்கு உண்மையான கள நிலைவரம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

உண்மையை கூறினால் மட்டுமே கட்சி பேதமின்றி இந்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க எம்மாலும் செயற்பட முடியும்.மாயைகளுக்கு அடிபணிந்து செயற்பட நினைத்தால் இறுதியாக நாடே நெருக்கடியில் விழும்.நாம் மக்களுக்கான எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற கொடுப்பனவுகளை தியாகம் செய்து மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.