![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/channa.jpg?fit=1024%2C711&ssl=1)
நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை எந்தவொரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
எனவே, இவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்களே அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நாளாந்தம் கொரோனாவால் மரணிப்போரில் அதிகளவானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர். இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு விசேட வேலைத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பொலிஸார், கிராம சேவகர் உத்தியோகத்தர் உள்ளிட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறினார்.
அதற்கமைய, வீடுகளுக்கு சென்று தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை இராணுவத்தினரால் மேல் மாகாணத்தில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் விரைவில் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டினார்.