
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள சிறுவர்களுக்கான கொவிட் சிகிச்சை மையத்தை காணொளி ஊடாக திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் போது ஏற்கனவே நோய் நிலைமைகளை உடைய சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
சிறுவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் இதற்காக பல திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தமது உரையில் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு முதலாவது சிகிச்சை மையம் தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஏனைய மாகாணங்களிலும் இது போன்ற சிகிச்சை மையங்களை நிறுவ உள்ளதாக தெரிவித்தார்.