
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணி கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் கொவிட் தொற்றால் மரணமடைந்தவர்களில் அதிகமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களினால் பீடிக்கப்பட்டவர்கள் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள ஜனாதிபதி, அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை முதியோர்கள் அனைவருக்கும் எதிர்வரும் தினங்களுக்கு தடுப்பூசியை செலுத்தி முடிக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.