![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/-மாவட்ட-மக்களுக்கு-தடுப்பூசி-_PMO_Tamil_Media_04-e1622383025252.jpeg?fit=1024%2C582&ssl=1)
கொவிட் மரணங்களை தடுக்கத் தவறும் பட்சத்தில் இலங்கையில் கொவிட் படுகொலையே இடம்பெறும் என்று சமூக மருத்துவத்துறை நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்தார்.
இந்த விடயத்தில் இப்போது தீர்மானம் எடுக்காது பொறுப்பை தட்டிக்கழிப்பதும், அதன் மூலமாக மக்களை காப்பாற்றாது போவதும் ஒரு விதத்தில் படுகொலைக்கு சமமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை விட 10 மடங்கு அதிகமாக இலங்கையில் மரணங்கள் பதிவாகலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது. இது எண்ணிக்கையில் அல்ல, வீதத்தில் கணிக்கப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணிப்பின்படி இந்தியாவை விட நான்கு மடங்கு வீதத்தால் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ளது என மருத்துவத்துறை நிபுணர் சுனெத் அகம்பொடி கூறியுள்ளார்.
அடுத்த மூன்று நான்கு வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும். எனவே உடனடியாக தீர்மானம் எடுத்து மரண எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இப்போதுள்ள நிலையில் தரவுகளுக்கு அமைய, நாளாந்தம் 600 மரணங்கள் பதிவாகலாம். ஆனால் மாற்றங்களை முன்னெடுத்தால் மரணங்களை குறைக்க முடியும்.
எவ்வாறாயினும் நாளாந்தம் 150 மரணங்கள் பதிவாவதை தடுக்க முடியாது. இதனை விட அதிகரிக்க இடமளிக்க கூடாது என்பதையே நாம் கூறுகின்றோம். இதனால் நாட்டை முடக்கினாலும் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னரே நிலைமைகளை கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்