July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அச்சுறுத்தல்கள் மூலம் எமது போராட்டத்தை தடுக்க முடியாது’: யாழ். ஆசிரியர் சங்க பிரதிநிதிகள்

எங்களின் போராட்டத்தை அச்சுறுத்தல்களால் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது செய்வதையோ நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் யாழில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர்களின் வாகனப் பேரணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பேரணிக்கு அழைத்து வந்த வாகனங்கள் மற்றும் ஒலி, ஒளிபரப்பு செய்த உரிமையாளர்களை பொலிஸார் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை திசை திருப்பி குழப்புகின்ற பொலிஸாரின் நடவடிக்கைகளை முழுமையாக எதிர்க்கின்றோம் என்றும் தீபன் திலீசன் கூறியுள்ளார்.

போராட்டத்திற்கு உதவிய வாகனத்தின் சாரதிகள் மற்றும் ஒளிபரப்பு சேவை வழங்கியவர்களை கைது செய்வதையோ விசாரணை செய்வதையோ பொலிஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.