July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டது

சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றாது அளவுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தந்தமையினால் மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை 14 நாட்களுக்கு மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இதேவேளை சுகாதார ஒழுங்குவிதிகளை மீறியமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்யவும், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தவும் அதிகாரிகளினால் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

ஆலய உற்சவம் தொடர்பாக கடந்த கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அது பின்பற்றப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஜ்.வாசுதேவன் தலைமையில் இன்று இடம்பெற்ற மண்முனை வடக்குகான கொரோனா செயலணி கூட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அது குறித்து நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க, மட்டு மாநகர பிரதி ஆணையாளர் கே.சிவராஜா, மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பிரதி பணிப்பாளர் வைத்தியர் கிரிசுதன், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.