June 14, 2025 4:38:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசி தொடர்பான ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கு இராணுவத் தளபதி பதில்

இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக்கு, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பதிலளித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இராணுவத் தளபதி பதிலளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்தினர் முன்னெடுக்கும் தடுப்பூசி வழங்கல் திட்டத்தையும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவும் இராணுவ மருத்துவமனையிலேயே தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்திடம் இருந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவர், நாட்டு மக்கள் தடுப்பூசி பெறுவதைப் பற்றி எவ்வாறு விமர்சிக்க முடியும் என்று ஷவேந்திர சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்பு செயலணியில் ஜனாதிபதி, துறைசார் அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள் இருப்பதாகவும் இராணுவம் தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால், அடுத்த ஒரு மாத காலம் ஆபத்தானது என்று ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.