July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மக்களுக்கு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம்!

vaccination New Image

இலங்கை மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

உலகின் ஏனைய நாடுகள் தமது மக்களுக்கு பூஸ்டர் டோஸ்களை வழங்குமானால் இலங்கையும் அதனை செய்வதற்கு தயாராக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாக அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கமைய தேவையான தடுப்பூசி அளவை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கைகளை உடனடியாக முன்வைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

உலகில் வளர்ச்சியடைந்து வரும் பல நாடுகளுக்கு முன்னதாக முதல் மற்றும் இரண்டாவது டோஸை இலங்கை மக்கள் பெற்றுக் கொண்டதால் இன்று இந்த நிலையை அடைய முடிந்தது என்று இராணுவத் தளபதி கூறுகிறார்.

நாட்டில் 93 விகித மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸும், 23 வீதம் பேருக்கு 2 வது டோஸும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனிடையே, பூஸ்டர் டோஸ் போடுவதை குறைந்தபட்சம் செப்டம்பர் மாதம் வரையாவது நிறுத்தி வைக்க வழிவகை செய்யும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

உலகின் எல்லா நாடுகளும் தங்கள் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10% பேருக்கு கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இதனை வலியுறுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் கூறியுள்ளார்.