June 11, 2025 14:40:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அச்சத்துடன் வாழும் சின்னத்தம்பனை கிராம மக்கள்.

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (07) இரவு சின்னத்தம்பனை கிராமத்தில் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்த யானைகள் வாழை மரங்கள், தென்னம்பிள்ளைகள், மரவள்ளி, பலாமரம் போன்ற பயன்தரும் மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் பாரம்பரிய கிராமங்களில் ஒன்றான சின்னத்தம்பனை விவசாயக் கிராமத்தில் கடந்த பல வருடங்களாக காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

இந் நிலையில், தற்போதும் யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது.

மேலும், கிராமத்தை யானைகள் ஆக்கிரமித்து வருவதால் தாம் தமது சொந்த கிராமத்தில் இருந்து வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை உருவாகி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தாம் நிரந்தரமாக விவசாயம் செய்து நிம்மதியாக வாழ்வதற்கு தமது கிராமத்தை சுற்றி யானைகளுக்கான மின்சார வேலியை அமைத்து தருமாறு மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.