June 13, 2025 17:24:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஐவர் கைது!

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் உள்ளிட்ட ஐந்து பேர் இன்று அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தை நடத்தி மஹரகம பொலிஸ் அதிகாரியொருவருக்கு காயம் ஏற்படுத்தியமை, சவப் பெட்டியை எரித்து வீதிக்கு சேதம் ஏற்படுத்தியமை, மாகாண பயணத் தடையை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சஞ்தீப ஆகியோரும் மற்றும் வெளிமாகாணங்களில் இருந்து கொழும்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்களை ஏற்றிவந்த வாகன சாரதிகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆர்ப்பாட்டக் காரர்களை கொழும்புக்கு அழைத்துவந்த மூன்று வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்றைய தினத்தில் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த புதன்கிழமை முன்னிலை சோஷலிச கட்சியின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.