July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெங்கு நுளம்புகளை கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்த தீர்மானம்!

நீர் நிலைகளில் டெங்கு நுளம்பு பரவியுள்ள இடங்களை துல்லியமாக அடையாளம் காணவும், நீர் தேங்கியுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்காகவும் மோப்ப நாய்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள ‘ஜொனி’ மற்றும் ‘ரொமா’ என்ற மோப்ப நாய்களே இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டதன் பின்னர் நுளம்பு காணப்படும் இடங்களை வெற்றிகரமாக இனங்கண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் டெங்கு ஒழிப்பு தொடர்பில் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் இந்த மோப்ப நாய்களைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 200 மோப்ப நாய்கள் இருக்கின்றன. அவை, குற்றங்களை விசாரிக்கவும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும் வெடி பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களை கண்டறியவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சில பிரதேசங்களில் பெரும்பாலான பகுதிகள் தூய்மையற்றவையாக காணப்படுவதால் நுளம்பு பெருக்கம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.

எனவே நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நுளம்பு பெருக்கம் காணப்படுகிறதா என்பதை இனங்காண்பதற்காக பொலிஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டன.

குறிப்பாக கண்டி பொலிஸ் மோப்ப நாய் பிரிவிலுள்ள ஜொனி மற்றும் ரொமா என்ற மோப்ப நாய்கள்  இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. பயிற்றுவிக்கப்பட்டதன் பின்னர் இந்த இரு மோப்ப நாய்களும் வெற்றிகரமாக நுளம்பு காணப்படும் இடங்களை இனங்கண்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் சுற்றுச் சூழல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும்  வெவ்வேறு  சுற்றிவளைப்புக்களில் இந்த மோப்ப நாய்களைப் பயன்படுத்த  எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு தொடர்பில் சுகாதார தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் இவற்றை பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.