July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புத்திசாலி சிங்கள மக்கள் தமிழ்,முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம்’

நாடு தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.புத்திசாலி சிங்கள மக்கள் தமிழ்,முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம்.ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்,முஸ்லிம்களை நம்பவில்லை.அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு பெற்றுக் கொண்டுள்ள கடன்களை மீள செலுத்த முடியாத நெருக்கடியான நிலையொன்றில் நாம் உள்ளோம்.இந்நிலையில் சீனாவுடன் மட்டுமே இணைந்து கொண்டு எமது நாட்டினை நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க முடியாது.சீன கொம்யூனிஸ கட்சியின் நூறாவது ஆண்டு பூர்த்திக்கு இங்கு தங்க நாணயம் வெளியிட்டு கொண்டாடுகின்றோம்.இன்று பல்வேறு நிறுவனங்கள் ஆங்கில, தமிழ் மொழிகள் மட்டுமல்ல சிங்கள மொழியும் இல்லாது சீன மொழியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே சீனாவின் ஒரு மாகாணமாக இன்று இலங்கை இயங்கிக் கொண்டுள்ளது.

வடக்கை பொறுத்தவரை நீண்டகால யுத்தத்திற்கு முகங்கொடுத்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாகாணமாகும்.யுத்தத்திற்கு பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பு, விவசாய நிலங்களை இராணுவம் கைப்பற்றியுள்ள காரணிகளால் எமது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தமது உற்பத்தியை சந்தைக்கு வழங்க முடியாத நிலையொன்று உள்ளது. இதனையெல்லாம் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து,எமது முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து,புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள புத்திசாலி சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.நாட்டின் நெருக்கடி நிலைமையில் இருந்து மீளும் விதத்தில் கைகொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர் என்பது அரசாங்கத்திற்கும், சிங்கள புத்திசாலி மக்களுக்கும் கூறிக் கொள்ள விரும்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.