July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் கல்வி இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது என்ற கருத்து முற்றிலும் தவறானது’

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது என நம் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள விடயம் முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன,மனித மூலதனம், வளங்கள் மற்றும் அறிவு என்பவற்றின் அதிகபட்ச பயன்பாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மூலம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின்படி,உயர்தர பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்கு மனித மூலதனம்,கிடைக்கும் வளங்கள் மற்றும் பரந்த அறிவின் அதிகபட்ச பயன்பாட்டிற்காக இத்தகைய மதிப்புமிக்க வாய்ப்பு ஜெனரல் சேர்.ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

அண்மையில் தயாரிக்கப்பட்ட கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் தொடர்பான உண்மைகளை ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்ததன் மூலம் தேசிய பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் அனுமதி எண்ணிக்கை ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் படி 41,000 ஆக உயர்த்தப்பட்டுள்ள போதிலும் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் உயர் கல்வி வாய்ப்பினை இழக்கின்றனர்.

செல்வந்த பெற்றோரின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்விக்காக வழிநடத்தப்படும்போது, ​​நம் நாட்டிற்கு சொந்தமான பெரும் தொகை நிதி வெளிநாடுகளுக்கு செல்வதனை மேற்கோள் காட்டிய ஜெனரல் கமல் குணரத்ன,வேறு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த உள்ளூர் பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர்க்கின்றனர்.

இருப்பினும், நம் நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வசதி இல்லாததால்,அவர்களின் உயர் கல்வியின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான வழிகளை இழக்கின்றனர் என்று தெரிவித்த அவர், அவ்வாறான மாணவ தலைமுறையின் தகுதியான பிரிவினர் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவதற்கான வாய்ப்பை உருவாக்குவது தவறா என்றும் கேள்வி எழுப்பினார்.

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த பாதுகாப்புச் செயலாளர்,கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது என நம் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ள விடயம் முற்றிலும் தவறானது என்று கூறினார்.

இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.