இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா பயணிகளைக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் இலங்கைக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அதன் பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளன.
அவ்வாறான நாடுகளுடன் இணக்கமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக பஸில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளைத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.