July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு மேல் நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை!

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை பட்டியலிட்டு துரிதப்படுத்துமாறு இலங்கையிலுள்ள அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு விசேட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

வாரத்தின் ஒரு நாளில் உயர் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படியும், நீதிமன்ற அதிகாரிகளால் சிறுவர் துஷ்பிரயோக வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதில் மஞ்சள் ஸ்டிக்கரை ஒட்டவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை அடையாளம் காண்பதற்கு ஏற்றவகையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த நீதிச் சேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள குறியீட்டை விரைவாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் ஒரு குறிப்பிட்ட திகதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.