
காணி சுவிகரிப்புக்கு எதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதை அடுத்து முல்லைத்தீவு வட்டுவாகலில் உள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கடற்படை முகாமிற்கான காணி அளவிடுவதற்கான நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்தப் பகுதிக்கு சென்றிருந்த போது அதற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் நில அளவீட்டை நிறுத்துமாறு கோரி வட்டுவாகல் பகுதியில் முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியை மறித்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.