July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சர்வதேச அழுத்தங்களின் மூலமாக ஆட்சியை மாற்ற எதிர்க்கட்சி முயற்சிக்கின்றது’

மனித உரிமைகள் குறித்தும்,போர் குற்றங்கள் என்ற குற்றச்சாட்டிலும் சர்வதேசம் இலங்கையை நெருக்கிக் கொண்டுள்ள நிலையில், பொருளாதார ரீதியாகவும் சர்வதேசத்தை எமக்கு எதிராக திருப்பி, சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள நிலையில் சர்வதேச கடன்களை எம்மால் பெற்றுக் கொள்ள முடியாது என கூறுவது தவறானது.சர்வதேச கடன்களை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.சீனா, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடம் இது குறித்து கலந்துரையாடியுள்ளோம்.அவர்கள வழங்கும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

அதேபோல்,மாணிக்கக்கல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.அண்மையில் மிகப்பெரிய மாணிக்கக்கல் எமக்கு கிடைத்துள்ளது.இது மட்டுமல்லாது எமது மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் வியாபாரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அதேபோல் ஏற்றுமதி குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களில் 2650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறான வேலைத்திட்டங்களின் மூலமாக எமக்கு கிடைக்கும். எனவே இனியும் கடன்களை எதிர்பார்த்து செல்லாது இவ்வாறான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என கூறியுள்ள அவர்,தேசிய வியாபாரிகளை பலப்படுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவும் வேண்டும்.அவ்வாறான தீர்வுக்கு செல்வது இலகுவான காரியம் அல்ல.கடினமான இலக்கொன்றை நோக்கி நாம் பயணிக்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.