July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு பலம்’: பிரதமர் மகிந்த

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு பாரமாக அன்றி, பலமாக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சின் குருநாகல் பிராந்திய தூதரகம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் இணையவழியில் உரையாற்றும் போதே, பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு பெரும் தொகையான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை மக்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் அரசாங்கம் அதன் கடமையை நிறைவேற்றும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றவர்கள் தொடர்பான தகவல்களை குடும்பத்தினர் பெற்றுக்கொள்வதற்கு பிராந்திய தூதரக அலுவலகம் உதவியாக அமையும் என்று மகிந்த ராஜபக்‌ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சிலர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.