![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/sampanthan.jpg?fit=512%2C341&ssl=1)
தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட அரசாங்க அதிபராக யாழ்.மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும்.மேலும் இது ஜனநாயக விரோதமான செயலாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,அந்த நியமனத்தை நிறுத்துமாறு கோரி பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யாழ். மாவட்டத்திற்கு விரைவில் தமிழ் பேச முடியாத ஒருவர் அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட இருக்கிறார் என நான் அறிந்துகொண்டேன்.
நீங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம்,யாழ்.மாவட்டத்தில் 95 வீதமானவர்கள் தமிழ் பேசும் சமூகத்தினராவர்.மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய நிர்வாகத்தினை சேர்ந்தவர்களும் தமிழ் பேசும் சமூகத்தினை சார்ந்தவர்களாவர்.
இந்த பின்னணியில் தமிழ் பேச தெரியாத ஒரு அரச உத்தியோகத்தரை மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபராக யாழ். மாவட்டத்திற்கு நியமிப்பது பொருத்தமற்ற ஒரு விடயமாகும். மேலும் இது ஜனநாயக விரோதமான செயலாகும்.
மாவட்டத்திலுள்ள உயர் பதவியில் இருக்கும் அரச உத்தியோகத்தர் தமிழ் பேசும் ஒருவராக இருக்கும் சந்தர்ப்பத்தில்தான் அவருடனான வாய்மூல மற்றும் எழுத்துமூல தொடர்பாடல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும்,தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான பூர்வீக இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய அரசியலமைப்பின் ஊடாக அதியுச்ச அதிகார பகிர்வினை வழங்க அரசாங்கம் முயற்சிகளை எடுக்கும் சந்தர்ப்பத்தில் இத்தகைய செயற்பாடுகள் எதிர்மறையான விளைவினையும் மக்களால் வரவேற்கப்பட முடியாத ஒன்றாகவுமே காணப்படுகின்றது.
எனவே அத்தகைய பிரேரணையை மீளாய்வு செய்து,மேற்குறித்த விடயங்களை கருத்திற் கொண்டு யாழ்.மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபராக அனுபவமும் செயற்திறனுமுள்ள தமிழ் பேசும் ஒரு அரச அதிகாரியை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.