July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஆறு மாதங்களில் 4,740 முறைப்பாடுகள் பதிவு!

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களுக்குள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் 4,740 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கடந்த மாதத்தில் அதிகமாக பதிவானதாகவும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் போராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ள தொழில்களின் எண்ணிக்கையை 76 ஆக அதிகரிக்க நடவடிக்கையெடுக்கும் எனவும், இது தொடர்பாக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சட்டம் மாற்றியமைக்கப்படும் என்றும் அதிகார சபையின் தலைவர்  கூறியுள்ளார்.

இதேவேளை சிறுவர்களை வீட்டுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 வயதுடைய சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்றும் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.