October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுவதற்கு பாதிக்கப்பட்டோரின் நம்பிக்கையை பெறக்கூடிய நல்லிணக்க முயற்சிகள் அவசியம்’

இலங்கையில் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் எனவும் இந்த இலக்குகளை நோக்கி செயல்படும் அனைவரின் முயற்சிகளுக்கும் கனடா தொடர்ந்து தன்னுடைய ஆதரவை வழங்கும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கனடாவை சேர்ந்த தமிழர்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழ் சமூகத்தினருடன் இணைந்து இலங்கையின் கறுப்பு ஜூலை நினைவு நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம்.
1983 ஜூலை மாதம் நீண்டகால பதற்றமும் அமைதியின்மையும் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்றது.இறுதியில் தமிழர்களிற்கு எதிரான படுகொலைகளாக அந்த நாள் மாறியது.அதனை தொடர்ந்து அந்த சம்பவம் நாட்டை 26 வருட ஆயுத மோதலிற்குள் தள்ளியது.

ஆயுத மோதல் பல ஆயிரக்கணக்கானவர்களை பலி எடுத்தது.பலரை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்த அதேவேளை,சமூகத்தினர் மத்தியில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியது.

கறுப்பு ஜூலைக்கு பிந்தைய மாதங்களில் கனடாவில் வாழ்ந்த தமிழர்களின பரப்புரை காரணமாக கனடா அரசாங்கம் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.இதன் மூலம் 1800 தமிழர்கள் கனடாவில் குடியேறுவதற்கும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக கட்டியெழுப்புவதற்கும் உதவியது.

இன்று கனடாவில் தமிழர்கள் புலம்பெயர் சமூகத்தின் பெரும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள்.மேலும் வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய கனடாவை கட்டியெழுப்புவதில் தமிழர்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

இந்நிலையில்,கறுப்பு ஜூலையின் போதும் அதன் பின்னரும் துயரங்களை அனுபவித்தவர்களுக்கும் உறவுகளை இழந்தவர்களுக்கும் கனடா அரசாங்கத்தின் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆயுத மோதல் 2009 இல் முடிவிற்கு வந்து விடாது.இனி நாட்டில் வாழும் அனைவருக்கும் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் பாடுபடவேண்டும்.இதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையைபெறக்கூடிய அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம்.இந்த இலக்கை நோக்கி பாடுபடும் அனைவருக்கும் கனடா தனது ஆதரவை தொடர்ந்தும் வழங்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.