October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மீதான அராஜகம் கூடிக்கொண்டு செல்கிறது’: சுமந்திரன் எம்.பி.

அம்பாறை மாவட்டத்தில் மாற்று சமூகத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக முக தோற்றத்தை வைத்து கொண்டு தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கம் செய்ய வேண்டிய பல விடையங்களை தடுத்து வருகின்றதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி முக்கியஸ்தர்களுடன் காரைதீவு நூலக வளாகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகங்கள் கூடிக்கொண்டே செல்கின்றதாகவும் தமிழ் மக்களது இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டாம் என்றும் சுமந்திரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.

தாம் நீதி, நியாயத்தை தூய மனதோடு செய்பவர்கள் என்றும் எந்த சமூகத்திற்கும் தீங்கு வரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருப்பதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத்திற்கு எதிராக, முஸ்லிம் தலைவர்களைவிட நாம் குரல் கொடுத்தோம்.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக பலவித இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக சரியாக, நியாயமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.

இதனை சீர்செய்ய வேண்டிய கடப்பாடு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறது. இனவாத அடிப்படையில் அல்லாமல் நீதி நியாயத்திற்காக முன்னிற்கின்றவர்களை ஆதரிக்க வேண்டும்.

நாங்கள் எந்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், தமிழ் சமூகத்திற்கு எதிரான அநீதிகளை தட்டிக் கேட்கின்ற பொறுப்பு எங்கள் தோள்களில் இருக்கின்றது”

என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.