
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி ஹட்டனில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தொழிலாளர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில், ஹட்டன் நகரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர், மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
“சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும், இந்த விடயத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், மலையகத்திலிருந்து சிறார்களை எவரும் வேலைக்கு அமர்த்தக்கூடாது, அவர்களுக்கான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதிவேண்டி பறைமேளம் அடித்து வீட்டுவேலை தொழிலாளர் சங்கம் மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள வீதிசமிக்கை விளக்கு பகுதியில் கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது.
மட்டக்களப்பு வீட்டு வேலை தொழிலாளர் சங்த்தின் தலைவி சத்தியவாணி சரசகோபால் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீட்டுவேலை தொழிலாளர்கள் பலர் இந்த கவனயீர்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு மேளம் கொட்டியவாறு ஊர்வலமாக பயணித்தனர்.
வீட்டுவேலை தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும், வேலைத்தளத்தில் பாதுகாப்பு வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் சட்டத்திற்கு முரணாக சிறுமியை வேலைக்கு அமர்த்தியதற்கு எதிராவும், சிறுமியின் உயிரிழப்புக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.