June 11, 2025 13:46:12

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண அதிகாரத்தை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக வழக்கு தாக்கல்;விக்னேஸ்வரன் தெரிவிப்பு

மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகு விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (21) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த தகவலை தெரிவித்தார்.

‘தற்போதுள்ள அரசாங்கமானது மாகாணங்களுக்கே உரித்தான கல்வி,சுகாதாரம் போன்ற விடயங்களை மாகாணங்களுக்கான அதிகாரங்களை தன் வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது அதற்கு சிலர் துணை போகிறார்கள்,சில மாயைகளை நம்பி சிலர் மாகாண அதிகாரத்தை மத்திக்கு தாரை வார்க்கும் முகமாக செயற்படுகின்றார்கள்.

ஆனால்,தற்போதுள்ள அரசாங்கமானது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு உட்பட்ட கல்வி,சுகாதாரம் போன்ற விடயங்களை தனது ஆளுகைக்கு உட்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் நாம் கல்வியலாளர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டிருந்தோம். அந்த சந்திப்பில் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம்.அதாவது இந்த மாகாணத்திற்குட்பட்ட பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளை மத்தி தனது ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகு விரைவில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய உள்ளதாக தீர்மானித்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.