July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் குறித்து பலகோணங்களில் விசாரணை!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரண சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக மேலும் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் இந்த விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும், கொழும்பு தெற்கு பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளர் ஒருவரின் கைத்தொலைபேசியை பெற்றுக்கொண்டுள்ள பொலிஸார் அதனை பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் சிறுமி பாடசாலை செல்லும் காலத்தில் வசித்த அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில், நான்கு பேரிடம் வாக்குமூலங்களை பொலிஸ் குழுக்கள் பதிவு செய்துள்ளன.

அத்துடன் சிறுமி கல்வி கற்ற அவிசாவளை, புவக்பிட்டிய – கிரிவந்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த இரண்டு பொலிஸ் குழுக்கள், டயகம பகுதிக்குச் சென்று, சிறுமியின் தாயாரிடம் மீளவும் வாக்குமூலம் பெறவுள்ளன. ஏனைய சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

அத்தோடு ரிஷாட் பதியுதீன் எம்.பியின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைபேசியை பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த கைபேசியில் ஏதேனும் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் அந்தக் கைபேசி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிக்கை ஒன்றும் பெறப்படவுள்ளது.