![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/WhatsApp-Image-2021-07-21-at-9.11.15-AM.jpeg?fit=819%2C499&ssl=1)
காலத்திற்கு காலம் அரசாங்கங்கள் மாறினாலும்,நிலையான தேசிய கொள்கையொன்றை உருவாக்கிக் கொள்ளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.மாறாக அமைச்சுப் பதவி மாறினாலும் கொள்கையை மாற்றிக் கொள்ளும் நிலை இனியும் தொடரக்கூடாது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் அடிப்படையில் நாடு இன்று பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வருகின்றது.இதற்கு கடந்த 40 ஆண்டுகால அரசாங்கங்களின் பலவீன செயற்பாடுகளின் விளைவுகளே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.
இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் வேளையில் கடந்த கால பலவீனமான செயற்பாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.அரச வங்கிகளில் அரசாங்கம் கடன்களை பெற்றுக் கொள்வது குறித்தும் நம்பிக்கையில்லா பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.அரச வங்கிகளில் கடன் வாங்காத அரசாங்கம் எதுவென தேடிப்பிடிக்க முடியாது.
அரச வங்கிகளில் கடன்களை பெறுவது அல்லது சர்வதேச கடன்களை பெற்றுக் கொள்வதை சகல அரசாங்கங்களும் கையாண்டுள்ளன. எமது அரசாங்கத்திலும் அதனை செய்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.