July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொந்த நாட்டின் இனத்தையே எதிரிகளாக நினைக்கின்றது அரசாங்கம்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இந்த நாட்டின் பிரஜைகளையே நீங்கள் எதிரிகளாக நினைத்துள்ளீர்கள் .அதேபோல் இந்த நாட்டில் தமிழர்களை எதிரியாக கருதியே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள்.அதனால் தான் வேறெந்த அமைச்சுகளையும் விட பாதுகாப்பு அமைச்சிற்கு அதிக பணம் ஒதுக்கப்படுவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வலுசக்தி என்பது அபிவிருத்திக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இன்று நாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு இந்த சபையில் உள்ள சகலரும் பொறுப்புக் கூற வேண்டும்.இதுவரை காலமாக முறையாக கொள்கைத் திட்டம் ஒன்று இல்லாது அரசாங்கங்கள் செயற்பட்டமையே இதற்கு காரணமாகும் எனக் குறிப்பிட்ட அவர்,
நாட்டின் வரவு-செலவு திட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்கு 10.3 வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது என்றால் யார் உங்களின் எதிரிகள் என்பதை கூறுங்கள்.இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் யுத்தங்களை தொடரவில்லை. அப்படி இருந்தும் இந்த நாட்டில் ஒரு இனக் குழுவிற்கு எதிராகவே நீங்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளீர்கள்.ஏனென்றால் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கவோ அவர்களை அங்கீகரிக்கவோ நீங்கள் தயாராக இல்லை.இதுதான் அவர்களுக்கு எதிராக யுத்தத்தை தொடுக்கவும்.அவர்களை கொன்று குவிக்கவும் காரணமாக அமைந்துள்ளது.

அன்று தமிழர்கள் போன்று இன்று முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.ஏனென்றால் உங்களின் ஊழல்வாத அரசாங்கத்தை கொண்டு செல்ல இவ்வாறான அடக்கு முறைகளை கையாண்டு வருகின்றீர்கள்.இராணுவ ஆக்கிரமிப்புக்குள் நாடு தள்ளப்பட்டு வருகின்றது.சிங்கள மக்களை திருப்திப்படுத்தி அவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்ற காரணத்திற்காக சிறுபான்மை மக்களை அடக்கு முறைக்குள் உற்படுத்த நினைக்கின்றீர்கள்.

ஆனால் ஒட்டுமொத்த நாடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு பயணிக்கவில்லை என்றால் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்குவர்.ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் எதிர்த்து மக்கள் போராடும் நிலைமையே உருவாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.