July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அர்ஜுன மகேந்திரன் இன்றி பிணைமுறி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அஜான் புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை நடத்திச் செல்வதற்கு கொழும்பு விசேட மூவர் அடங்கிய மேல் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டில் மத்திய வங்கியின் பிணைமுறி ஏலத்தின் போது 36.98 பில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு கொழும்பில் விசேட மூவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றனது.

இந்நிலையில் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக அர்ஜூன மகேந்திரன் மற்றும்  அஜான் புஞ்சிஹேவா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் நாட்டில் இல்லாத காரணத்தினால் அந்த வழக்கை எவ்வாறு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக குறித்த வழக்கு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஆராயப்பட்டுள்ளது.

இவ்வேளையில் குறிப்பிட்ட பிரதிவாதிகள் இருவரும் இல்லாது குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள் குழாம், வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தனர்.