July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்வேறு விடயங்களுக்கு தீர்வு கோரி மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு விடயங்களுக்கு தீர்வு கோரி மஸ்கெலியா பிரவுன்ஸ் விக் தோட்ட மக்கள் இன்று (20) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ‘நியாயமான 1000 ரூபா சம்பள உயர்வு வேண்டும், வேலை நாட்கள் குறைக்கப்படக் கூடாது, கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு’ ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், 1000 ரூபா சம்பள அதிகரிப்பை தருவதாக கூறிய கம்பனிகள் தற்போது ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, முன்னர் நாளொன்றுக்கு 16 கிலோ பச்சை தேயிலையை பறித்து வந்த நிலையில், இன்று 20 கிலோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறான நிர்வாகங்களின் கெடுபிடிகளால் தாம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் நிர்வாகத்தால் தோட்டம் உரிய முறையில் பராமரிக்கப்படாமையால் தேயிலை செடிகள் காடுகளாய் மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அடிமைகளை போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றை நிர்வாகம் முறையாக செலுத்துவதில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தலையிட்டு நியாயமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

This slideshow requires JavaScript.