![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/WhatsApp-Image-2021-07-13-at-2.36.21-PM.jpeg?fit=1024%2C576&ssl=1)
உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண் ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பினூடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் நேற்று (19) கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இலங்கையில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி சில மாதங்களுக்கு முன்பாக 36 வயதான குறித்த பெண்ணை, இலங்கைக்கு அழைத்து வந்த சந்தேகநபர் அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான இலங்கையரின் மனைவியான உஸ்பெகிஸ்தான் நாட்டு பெண் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குற்ற விசாரணை பிரிவினரால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.