July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குடியியல் சட்டக் கோவையில் திருமணம் தொடர்பான நடைமுறைகளில் திருத்தம்

இலங்கையின் குடியியல் சட்டக் கோவை மற்றும் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ள திருமணம் தொடர்பான நடைமுறைகளைத் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக எந்தப் பிரஜையும் ஓரங்கட்டுதல் ஆகாது என அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தில் ஏற்பாடுகள் உள்ளன.

ஆனாலும், முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் முஸ்லிம் திருமண மற்றும் மணநீக்கச் சட்டத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படும் ஒரு சில ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான ஏற்பாடுகளை சட்டத்திலிருந்து நீக்குவதற்கான தேவையை பல்வேறு மகளிர் அமைப்புக்கள், முஸ்லிம் சமூகத்தவர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால், இலங்கைப் பிரஜைகளின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமூகத்தவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து நிர்வகிக்கப்படும் மாற்று வழிகளை அவர்களுக்கு வழங்குவது உகந்ததெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாயின், அவர்களுக்கு குறித்த கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வகையில் குடியியல் சட்டக் கோவை மற்றும் குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையில் உள்வாங்கப்பட்டுள்ள திருமணம் தொடர்பான நடைமுறைகளைத் திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.