July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இன்றும் நாளையும் கொழும்பிலேயே இருங்கள்”: ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி வேண்டுகோள்!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சியினரால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், அதனை தொடர்ந்து குறித்த பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்படி இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு விவாதம் நடத்தப்பட்டு நாளை மாலை அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் நேற்று ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சிக் குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்தப் பிரேரணை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஆளுங்கட்சியில் உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியின் அனைத்து எம்.பிக்களுக்கும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும் இன்றும், நாளையும் கொழும்பிலேயே தங்கியிருக்குமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்களை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.