July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீர்மானங்கள் சிலவற்றை எடுக்க ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது ஆளுங்கட்சிக் குழு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் ஆளுங்கட்சிக் குழு இன்று கூடவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை இந்த கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்ளுமாறு ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ள நிலையில், அதன்போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிக்கும் முறை தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று, எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பிலவை கடுமையாக விமர்ச்சித்து வந்த  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் கம்மன்பில, பிரேரணை வெற்றிப் பெற்றாலும், தோல்வியடைந்தாலும் தனக்கு வெற்றியே கிடைக்கும் என்பதால் இந்த விடயம் தொடர்பில் தான் யாருடனும் கலந்துரையாடவில்லை என்று கூறியுள்ளார்.